எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை
லீவுக்கு வந்த
அத்தை பிள்ளைகளுடன்
அதிகாலையிலேயே
பாளை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள
பால் பண்ணைக்குச் சென்ற நாட்கள்
சட்டென்று நேற்றைக்கு
காரணமின்றி நினைவுக்கு
வந்தன…
ஆளுக்கொரு தூக்குச் சட்டியுடன்
பாலும் மோரும் வாங்கக் காத்துக்
கிடப்போம்..
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்
காத்திருக்க
பித்தளைப் போணியோடும் மடியில் கட்டிய
எண்ணெய் டப்பியோடும் சைக்கிளிலிருந்து
ஜம்மென்று இறங்குவார்
பால் பீச்சும் மயிலக் கோனார்…
அவர் சொன்னபடியெல்லாம்
பசுக்கள் கேட்பது எங்களுக்கு
ஆச்சர்யமாக இருக்கும்.
கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டுக்
கொஞ்சம் எக்கிக் குடிக்கும் போதே
பிடித்திழுத்துக் கட்டிச்
செம்புத் தண்ணீரால்
பசுவின் மடியைக் கழுவும் அவரது செயலை
பார்த்துப் பார்துச் சிலிர்ப்போம்
எல்லாப் பசுக்களிலும்
கடைசியாய் அப்பசுவிற்கு
அருகில் வந்தவர்
பாசத்தோடு தடவிக்கொடுத்தார்
எங்களுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும்
போலிருந்தது.
அவிழ்த்து விடக் கன்று அங்கே இல்லை
கேட்கப் பயம்
ஸ்டூல் மேலேறிப் பரணிலிருந்த
வைக்கோல் அடைத்த
விரைத்துப் போன கன்றுக்குட்டியை
எடுத்துப் பசுவிற்கு அருகில் நிறுத்தினார்
பாவம்…
அவ்வைக்கோற்
கன்றினை
அந்த ஐந்தறிவு ஜீவன்
தன்கன்றென நினைத்து நாவால் வருடிக் கொடுத்தது.
வழக்கம் போல் பால் கறக்க
அவர் செம்பைத் தூக்கினார்
அதற்கு மேல் எங்களால்
அங்கே இருக்க முடியவில்லை .
வகுப்பு முடித்து துறையில்
அமர்ந்த போது
சொக்கட்டான் தோப்பு சண்முகத்தின்
தங்கையின் பத்துநாள் குழந்தை
மருத்துவமனையில் இறந்தது
நினைவுக்கு வந்தது
பசுவிற்குக் வைக்கோற்கன்று தந்த
கணநேரத் கானல் நிம்மதியைச்
சிசுவை இழந்த சண்முகத்தின்
தங்கைக்கு யாரால் தரமுடிமுடியும்?
சில நேரங்களில்
அஃறிணையாகவே
இருந்தது விட்டுப் போகலாம்
போலிருக்கிறது.
This entry was posted
at 04:45
. You can follow any responses to this entry through the
.