Posted

1997 ஆம் ஆண்டு திரு. கமல்ஹாசன் அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில்மாநில அளவில் முதலிடம் பெற்ற கட்டுரை
மெல்லத் தமிழ் இனி...
பாசத்திற்குரிய பாரதிக்கு, 

தமிளில் பெயிலாகிப் போன தமிளுவேந்தன் எழுதுவது. நீ நளமா? நான் நளமா இல்லை! உன் மேல் என்றைக்குமே எங்களுக்குத் தீரா வெறியுண்டு.  மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, பேதைக்குரலில் பெரிதாகச் சொன்னாயே… உன் வார்த்தைகளுக்கு நாங்கள் வாழ்க்கைக் கொடுத்துவிட்டோம்.
            சந்தக் கவியெடுத்து, செந்தமிழை அதில் குழைத்து மந்தத் தமிழினனத்தை மந்திரிக்க வந்த தமிழ், இன்று சீழ்பிடித்து, அயல் மொழியின் கால்பிடித்து மயானத்தை நோக்கி மாட்டு வண்டியில் போய்கொண்டிருக்கிறது! கவிஞர் பட்டங்களோ இன்றைக்குக் காசுக்குக் கிடைக்கின்றன, முனைவர் பட்டங்களோ மூர் மார்க்கெட்டில் விற்கின்றன.  கடைகளில் சிலேபி விற்கும் அளவுக்குகூடச் சிலப்பதிகாரம் விற்க மறுக்கிறது. 
அதோ பார், பாரதி! ஓடம் முழுக்க ஓட்டைகளோடு, காலங்கையின் கடைசிப் பயணயாய் நம் தமிழ், காரணம்... உம் நேசமிகு நெட்டை நெடுமரங்கள்...
            தேன் தமிழில் பேசினால் ஏன் தமிழில் பேசினாயென்று சண்டைக்கு வரும் கூட்டம் ஒருபுறம், துவிச்சக்கரவண்டியேறித் தொல்காப்பியத் தோட்டத்தில் தொடரோட்டம் நடத்துச் சொல்லும் கூட்டம் மறுபுறம். இடையில் ஊமை நாடகத்தின் உலவும் பாத்திரமாய் உன் உன்னதத் தமிழன்னை.
            தமிழ்ப்பள்ளிகளில் தலைநிமிர்ந்து நிற்பதை விட, கான்வெண்டுகளில் கம்பி எண்ணுவதைத்தான் கவுரமாய் நினைப்பவர்கள் நாம் என்பதாலோ என்னவோ, ”அய்யா” என்ற அழைப்புக் கூட அவமதிப்பாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
நெஞ்சு பொறுக்குதிலையே
            பப்பாளிப் பாலெடுத்துப் பால்கோவா கிண்டச் சொல்லி ஸ்டார் டி.வி. யில் அந்நியர் யாராவது ஆங்கிலத்தில் சொன்னால், உண்டு பார்த்துவிட்டு, உன்னதச் சுவையென்று தலையை ஆட்டும்போது நம் சுயங்கள், மலடாகிப் போனதை மறுக்க முடியாது.
            சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாணியை இறக்குமதி செய்து வந்து, சந்தன மணம் அதில் சார்ந்திருப்பதாய்ச் சாதிக்கும் இவர்களுக்குத் தாய்மொழி என்பது தரங்குறைந்த ஒன்றுதான்.
            ஒன்றைரை வரிகளில் உலகளந்த திருக்குறளும், சிந்தனை தரும் சிலம்பும், மேலான மதிப்பீடுகள் தந்த மேகலையும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், சங்க இலக்கியத்தின் பத்து எட்டொடு குண்டலகேசியும் சொல்லாததையா வேறு உலகஇலக்கியங்கள் விளக்கி விடப் போகின்றன? மற்ற துறைகளை வாழ்க்கைக்குப் படிக்கிறோம் என்றால் தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
            ஒவ்வொருவரும் தங்கள் கடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிப்பதைப்போல அந்தந்த மொழியினர், தத்தம் தாய் மொழியை முன்னிறுத்திப் பிடிப்பது வழக்கம்;  நம் தமிழைத் தவிர! தாய் மொழியினால் மட்டுந்தான் எவராலுமே சிந்திக்க முடியும்.  தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதென்றால், அவரின்சிந்திப்பு மூலம் வங்கமொழி!  எழுத்தாளர் தோப்பில் மும்மது மீரான் தன் நாவல்களைத் தனக்கு நன்கு பரிச்சயமான மலையாளத்தில் சிந்தித்து, பின் அதைத் தமிழ்ப்படுத்துகின்றாராம்.
ஆனால் நம் கல்வி முறையில் நடப்பதென்ன? எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ். வரை தமிழின் “அ“ கரத்தைக்கூட அறியாமலே தமிழ்நாட்டில் பட்டம் வாங்கி விட முடிகிறது.  ஒன்றுமே புரியாத பிஞ்சு வயதில் “நர்சரி நரகங்களில்“ அவர்களை நட்டு ஆங்கிலஅமிலத்தை அள்ளி ஊற்றும்போது கல்வி கற்பதே அதற்குக் கசப்பாகப் பதிந்து விடுகிறது.

இனி பொறுப்பதில்லை
          திருமண வீட்டில் உணவு உண்ணப் பந்தியில் அமரும்போது, சாதம், சாம்பார், ரசம், பாயசம், மோர் எனத் தனியே முறையாக உண்ணும் நாம், மொழியில் மட்டும் கூட்டாஞ் சோறுகளையே கூடுமானவரை கலக்கிறோம் என்பது கண்களில் கந்தக அமிலத்தை ஊற்றுவதை விடக் கொடுமையான செய்தி.
Pass பண்ணி Study பண்ணி Start பண்ணி, எனத் தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் வாழவா செய்யும்?  தான் இறந்தபின் தன் கல்லறையில், ங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுதுங்கள், என்று அயல்நாட்டுப் பாதிரியார் ஜீ.யூ.போப்பையர் மதி்த்த தமிழுக்கு, தெவசம் வைக்க இன்று தேதி குறிக்கிறோம்.  தமிழில் பெயர் வைத்தாலும் ஆங்கிலத்தில் தலையெழுத்துக்கள், ஓர் ஆங்கில நூலில் . MAHADEVAN என எழுதினால், தோலை உரித்து அவர்கள் தோல் பை செய்து விடுவார்கள்.  ஆனால் நாம்?
     பொந்தி சேரி பாண்டிச்சேரி எனும் பெயர் அடிமையின் அடையாளம், எனவே புதுச்சேரி ஆக்குவோம் என மாற்றி நான்கு வருடமானபின்தான் தமிழ்நாடு MADRAS, சென்னையாக மாறுகிறது.  அரசு ஆணை பிறப்பித்த பின்னும் விமான நிலையங்களில் இன்னமும் மெட்ராஸ் என அழைக்க முடிகிறதென்றால் தமிழ் இனி வாழவா செய்யும்?
ALL INDIA RADIOவை அகில இந்திய வானொலியாக்கி விட்டோம் என ஒரு கூட்டம் சப்தம் போடும் அதே நேரம் டெல்லி தமிழ்ச் செய்தியறிக்கையில் ஆஷாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமிஎன ஒலிக்கும்போது தமிழுக்கு, வாழும் வாய்ப்பு உண்டா என்ன?
இலக்கிய இடறல்கள்
     கேரளாவில் போய் “உங்கள் ஒப்பற்ற எழுத்தாளர் யார்?” என்றால் எந்தவித எதிர்க் கருத்துமின்றி எம்.டி. வாசுதேவன் நாயரையோ, பிறரையோ சொல்வார்கள்.  ஆனால் தமிழகத்தில்? ஊருக்கு ஒருவரைச் சொல்லி, கடைசியில் எவருமே இல்லை என்பார்கள்.  கோடிப் படைப்பாளிகளுக்குள் பல்லாயிரம் பிரிவினைகள்.  விளைவு  இலக்கியம் இடறலில்.
     கரன்ஸிக்காரர்களின் வியர்வைக்கு வெண்பா எழுவதும், ஹார்லிக்ஸை சோளநக்கியாக்கி, குளுக்கோஸைப் பருச்சருக்கரையாக மொழிமாற்றம் செய்யவும், முக்கல் முனகல்களின் இசைப்பள்ளங்களில் வார்த்தையை அள்ளிப் போட்டு நிரப்பும் ஆபாச வாகனமாயும் தமிழை மாற்றியபின் இலக்கியத்தமிழ் வாழவா செய்யும்?
இதயத்துடிப்பு நின்றுபோன இசைத்தமிழ்
     மாசில் வீணை வைத்து, மாலை மதியமும் பூண்டு, தேவாரப் பண்ணென்றும், தெவிட்டா நல்பாட்டென்றும், பூவாரமணம் பெற்ற புனிதஇசைத்தமிழ், இதயம் கிழிபட்டு இரணமாகிக் கிடக்கிறது. தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்என்று அப்பரால் சப்பரத்தில் ஏற்றப்பட்ட சந்தத்தமிழ் சலுகைப் பருக்கைகளுக்காக இன்றைக்கு மொழிக்கலப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறது.  
இசையுலகின் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், தியாகப்பிரம்மமுமான மூவருமே தமிழகத்தில் உதித்தவர்கள்தான்.  ஆந்திர விசயவாடாவின் சபாக்களில் போய் அமர்ந்து 24 மணி நேரமும் தமிழிசை பாடினால் சும்மா விடுவார்களா?  நாட்டுப்புறத் தமிழிசையை மறந்த சமுதாயத்தி்ன் முன் மெல்லத் தமிழ் துளிர்த்து விட முடியுமா?

நலிந்து கொண்டிருக்கும் நாடகத் தமிழ்
    நாடகத்துக்கே இலக்கணம் வகுத்து, சிலப்பதிகாரம் பேசிய சீர்மிகுகாலம் மாறி, காரை பெயர்ந்த கட்டிடமாய், வேரை இழந்த விருட்சமாய் தமிழ் நாடகங்கள் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
    “How are you Bala? I am fine ya!” You became mad Ya... why? Because you are my friend.  இது மிகப்பிரபலமான தமிழ் நாடக கர்த்தாவின் தமிழ் நாடகத் தொடக்கம்... நிச்சயம் தமிழ் வாழும் தானே!
மனதில் உறுதி வேண்டும்...!
    ஓடு ஒழுகுவதைக் காரணம் காட்டி, வீட்டை விற்றுவிட்டுப் போய் விட முடியாது.  க்யூ வரிசையிலும், கேட்டுவாசலிலும், நடு சென்டரிலும் தமிங்கிலிஷ்,படித்த நம் மனப்பான்மை மாற வேண்டும். சுத்தத் தமிழைப் பேசுங்கள்!என்று சொல்ல வரவில்லை.  பேசும் தமிழைச் சுத்தமாகப் பேசுவோம் என்பதே என் அழைப்பு.
    தமிழ் என்றாலேயே கோவலன், கண்ணகி என்று பதிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டும்.  எந்தத் துறைக்குமே சளைக்காத வகையில் தமிழும் நவீனத்தோடு கைக்கோர்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன.  அதையெல்லாம் தமிழறிஞர் ஏற்றுக்கொண்டு பிறருக்கும் அறிவித்தாக வேண்டும்.  அதற்கு விவாதங்களை முன்நிறுத்த வேண்டியது அவசியம்.    
     தூய வெண்துணியில் எந்த நிறத்தை ஏற்றினாலும், அது அதுவாகவே மாறிவிடும்.  இணையம்வந்துவிட்ட நேரத்திலும் இலக்கணக் குறிப்புகளைப் பற்றியே ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தால், காலப்பேருந்து நம் காலில் ஏறிவிடும்.  தன் பிள்ளை என்பதற்காகக் காலக்முழுக்கக்  கக்கத்திலேயே தூக்கித் திரிந்தால் வளர்ச்சி என்பது வரப்போவதில்லை.
     சீக்குப்பிடித்த சிந்தனையை விட்டு விட்டுப், புதுமையைச் சிநேகத்தோடு வரவேற்போம்.  லேசரில் அச்சடிப்பதால், கம்பராமாயணமொன்றும் களங்கமாகி விடப் போவதில்லை.  முதலில் நம் தாய்மொழியை நாம் மதிப்போம்.  பின் உலகம் நம்மை மதிக்கும்.  அப்போது மெல்லத் தமிழினி வாழும் அந்த மேற்குமொழிகள் தனி புவிமிசை மாளும் பாரதி! உழவாரம் தூக்கிய அப்பர் மாதிரி, உறுதியைத் தூக்கிப் புறப்படுகிறோம்.
     காரணம்... உன்னைப் போல நானும், தாமிரபரணியின் தண்ணீர் குடிப்பவன்.
     எனது முதல் குறி அவன்தான்... அதோ பார்...
     அவன் பாடுவதை,
     தீராத விளையாட்டுப் பில்லை... கண்ணன்.
     தெருவிளே பெண்களுக்கோயாத தொள்ளை
     இந்தியன்தாத்தாவாக எழுகிறோம்... தமிழின் தலைகுனிவு நீக்க!
என்றும் அன்புடன்
தமிளு வேந்தனாக
சவுந்தர மகாதேவன்,
பாளையங்கோட்டை.







      

Posted

                                                                           வாழ்த்துக்கள்



 சாரல் விருது 2012 பெறும் எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன், திரு.வண்ணநிலவன் அவர்களை மகா தமிழ் வாழ்த்துகிறது

Posted


'நல்லதோர் வீணை செய்தே...'
எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகில் ஓர் பயணம்
முனைவர். . மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி 627 011.
9952140275
nellaimaha74@gamil.com.

    'இருக்கும் போது எருகம் பூ கூடத் தரவில்லை, மரித்தபின் மலர்வளைய மரியாதைகள் மகாகவி பாரதி முதல் எழுதுகோலோடு நாளை அமரகாவியங்கள் படைக்கக் காத்திருக்கும் புதிய எழுத்தாளர்கள் வரை இதுதான் கதி.
    1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் பயின்ற போதே கே.டி.கோசல் ராம் நடத்தியபுதுமைஇதழில் எழுதி ஏழையின் கண்ணீர்' எனும் கதையின் மூலம் எழுத்துலகில் நுழைந்து, இதோ நெருங்கிவிட்ட 2012ஆம் ஆண்டோடு ஐம்பது ஆண்டுகளை எழுத்துக்காகவே அர்ப்பணித்து, இன்னும் எழுதிவரும் திருநெல்வேலி தி..சிவசங்கரனின் மகனாகப் பிறந்த சி. கல்யாணசுந்தரம் எனும் வண்ணதாசனுக்கு நாம் தந்த கவுரவம் என்ன? என்ற வினாவோடு அவரது எழுத்துலகம் பற்றிய எண்ணவோட்டத்தில் கலக்கிறேன்.

    'கல்யாணி அச்சகம், கம்பாசிடர் கணபதி' இதுதான், வண்ணதாசன் எழுதிய முதல் சிறுகதையின் முதல்வரி ' துன்பம் இனியில்லை சோர்வில்லை, தோற்ப்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட' என்று பாரதிப் பெருங்கவிஞன் சொன்னது போல் வண்ணதாசனின் கதையுலகம் அன்புலகம். வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்கள். வாழ்வைக் கலையாகவும் கலையை வாழ்வாகவும் புரிந்து வைத்திருக்கிற வண்ணதாசனின் 117 சிறுகதைகளைத் தொகுத்துப் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளவண்ணதாசன் கதைகள்என்ற தொகுப்பு பிரமிக்க வைத்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் தூண்டியது.  அதில் இடம் பெறாத கதைகளோடு 'கிருஷ்ணன் வைத்த வீடுதொகுப்பும் (2000), அத்தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்துபெய்தலும் ஓய்தலும்” (2007) தொகுப்பும், அதற்கடுத்த மூன்றாமாண்டில் (2010) “ஒளியிலே தெரிவதுதொகுப்பும் வெளிவந்து உயிர்மைப் பதிப்பகத்தின் சுஜாதா விருதும் (2011) பெற்றது.
    'பெய்தலும் ஓய்தலும்' தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய வண்ணதாசன் புதுமைப்பித்தன் 99 சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஒரு கணக்குச் சொல்வார்கள், புதுமைப்பித்தனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், அவன் எழுதாமல் போன அந்த நூறாவது கதையை எழுதிவிடத்தான் முயன்று கொண்டு இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.”  என்று சொல்லும் வண்ணதாசன் 160 கதைகள் படைத்திருக்கிறார்.
    வல்லிக்கண்ணன் மீது கொண்ட அன்பால் வல்லிக்கண்ணதாசனாகத் தன்னை உருவகித்து வண்ணதாசன் எனும் புனைபெயரில் 15 வயதில் எழுதத் தொடங்கிய அந்த அழகியல் எழுத்தாளனுக்கு இன்று 65 வயது!  அவரது படைப்பிலக்கியங்கள் அருமையான வாழ்க்கையை நேசிக்கிற, யாவற்றையும் ரசித்து மகிழ்கிற எல்லோரிடம் அன்பு செலுத்தத் துடிக்கிற இறவாப் புகழ் பெற்ற மென்மைத் தன்மை பெற்ற பாத்திரங்களாலானது.  எவர் கண்களிலும் பாடாதவாழ்வு நுட்பங்களைக் கூர்மையாகக் கண்டு, வண்ணங்களைக் குழைத்துத் தூரிகையால் மொழிநடை எனும் பரப்பில் வாழ்க்கைச் சித்திரங்களை அவர் படைத்து வாசகனைப் பிரமிக்க வைக்கிறார்.
    “எல்லோரையும் ஏற்றுக் கொள்கிறேன்.  அவரவர் பலங்களோடும் அவரவர் பலவீனங்களோடும்என்று போலித்தனமற்று இயல்பாக வாழும் வண்ணதாசனின் படைப்புக்களம் திருநெல்வேலி மண்சார்ந்து அமைகிறது.  திருநெல்வேலி சுடலைமாடன் கோவில் தெருவிலும், சுவாமி நெல்லையப்பர் ரதவீதியிலும், வளவு வீடுகளிலும், அவரது சுந்தரத்துச் சின்னம்மையும், பாப்பாத்தி ஆச்சியும், கணபதியண்ணனும், அகிலாண்டத்து அத்தானும், உலவிக் கொண்டே இருக்கிறார்கள்.
    உறவுகளே வண்ணதாசனின் கதாவிலாசங்கள்.  பெண்ணைத் தோழியாக, அன்பின் தாயகமாகக் காணும் வள்ளிமாணளன் எனும் வண்ணதாசனின் பாட்டுடைத் தலைவி அருவடைய துணைவியார் திருமதி வள்ளி அம்மையார் அவர்கள்தான்.
    இவரது கதைகளில் இடம் பெறும் ஆண்பாத்திரங்களும் பெண்ணியல்பு உடையவர்களாக உரத்துப் பேசாத மென்மைத் தன்மை உடையவர்களாகவே திகழ்கின்றனர்.  அவரது கதைகளின் வெற்றிக்கு அவரது தனித்துவம் மிக்க மொழி நடையும் அதற்குள்ளிருந்து அழகு செய்யும் உவமைப் பயன்பாடும் காரணமாக அமைகின்றன.  கவிதை உத்தியான உவமையை இவர், தேர்ந்த கதை உத்தியாக்கி வென்றுள்ளார்.
    “கணையாழி, கசடதபறபோன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் வண்ணதாசன் எழுதியிருந்தாலும் 1967 டிசம்பரில் எழுதிய 'சபலம்' கதை முதல் 1987 ஏப்ரலில் எழுதிய 'அப்பால் ஆன' கதை வரை 24 கதைகளைத் தீபம் இதழில் வெளியிட்டுத் தீபம் நா. பார்த்தசாரதி ஊக்கப்படுத்தினார்.
    தீபத்தின் இலக்கியக் கொள்கைகளான பரிசுத்தமும், சத்தியமும், நேர்மையும், ஒழுக்கமும், சக மனிதர் மீதான அக்கரையும், குடும்ப உறவுகளைக் கொண்டாடுதலும் வண்ணதாசனின் இலக்கியக் கொள்கைகளாயின.  அவர் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பக்கக் கதைகளில் ஒரு வரியில்கூட ஆபாசத்தைப் பார்க்க இயலாது.
    ஏதுமறியாப் பதின்பருவத்துச் சிறுவர் சிறுமிகளை இவரைப் போல் வேறுயாரும் துல்லியமாகப் பதிவு செய்ததில்லை.  சலனமற்ற ஆழ்கடலுக்குள் மூச்சடக்கி முத்துக்குளிப்பவன் முத்தெடுப்பதைப்போல் வண்ணதாசன் மனக்கடலில் மூழ்கிச் சொல் முத்துக்களைப் பொறுக்கி எடுத்துப் பல மணி மாலைகளைத் தருகிறார்.  வாழ்வின் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாசகனை நெகிழ்வுக்குள்ளாக்கும் சமப்வங்களை வெகு இயல்பாக வண்ணதாசன் தருகிறார்.
    வண்ணதாசன் தேர்ந்த ஓவியராகவும் உள்ளதால் வாழ்வின் ஆயிரக்கணக்கான வர்ணங்களை அதன் விகிதங்களை மாற்றி வேறு வேறு வர்ணங்களாக அகச்சித்திரமாகப் படைக்க முடிகிறது.  கதைகளுக்குத் தலைப்பிடலை வண்ணதாசன் மிக நேர்த்தியாய் மேற்கொள்கிறார்.  ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலான கதைத் தலைப்புகள் ஒற்றைச்சொல் தலைப்புகளாகவே அமைகின்றன.  போட்டோ, பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும் எனும் இரு தலைப்புகளைத் தவிர ஏனைய கதைத் தலைப்புகள் யாவும் ஆங்கிலச் சொல் கலவாத் தமிழ்த் தலைப்புக்களாகவே அமைகின்றன.
    வெள்ளையடித்தலையும், நோஞ்சான் கன்றினை ஈன்ற பசுவையும்கூட அவரால் நேர்த்தியாகக் கதையாக்க முடிகிறது.  அவர் கதைகள் யாவும் அவரது வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளே.  அவரது கதைகளை அவரது வாழ்க்கை வரலாற்றுத் தடங்களோடு ஒப்புநோக்கி முன்பின்னாக மாற்றி அமைத்தால் தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய வடிவம் கிடைக்கும்.
    'சின்னு முதல் சின்னு வரை' எனும் நீள் சிறுதை அவர்  வருங்காலத்தில் எழுத இருக்கிற நாவல் இலக்கியத்திற்கு முன்னுரை தருவதாக, முன்னோட்டம் தருவதாக அமைவதாக எடுத்துக் கொள்ளலாம்.
    'எல்லோர்க்கும் அன்புடன்' என்று அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் கடித இலக்கியத்திற்கு மேலூக்கம் தருவனவாக இலக்கியச் செழுமையோடு அமைகின்றன.
    வண்ணதாசனின் வியக்கத்தக்க மற்றொரு மென்மையான அவதாரம் கல்யாண்ஜி என்ற கவிஞன்.  புதிய சுவையோடும், புதிய பொருளோடும், புதிய வளத்தோடும், புதிய சொல்லோடும் சோதிமிக்க நவ கவிதையை இக்கவிஞர் தன் பள்ளிநாட்களிலேயே (அறுபதுகளில்) தொடங்கி விட்டார்.  பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இளஞ்செடியாய் முளைவிட்ட கவிதைச் செடிக்குக் கல்யாண்ஜி உரமூட்டியிருக்கிறார்.
    1966இல் கல்யாண்ஜி தூத்துக்குடி ..சி. கல்லூரியில் பயின்ற போது (பி.காம்) எழுதிய 'அந்திமனம்' என்ற கவிதை, புதுமைப்பித்தனின் 'ஓகோ உலகத்தீர் ஓடாதீர்', எனும் கவிநடைக்கு இணையாக அமைகிறது. “பள்ளிச்சிறுபையன் பட்ட பிரம்படியால் உள்ளங்கை செம்மை உருவேற்கும் ஒன்றாக வானம் இருந்ததுகான்' என்ற வரிகள் அதற்குச் சான்று.  'எதையும் செய்யுங்கள் ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள்' என்ற அறிவிப்போடு வெளிவந்த கசடதபற இதழில் கல்யாண்ஜி எழுதிய 'இதயவீணை தூங்கும் போது' கவிதை எல்லோராலும் புகழப்பட்டது.
'பேசும் பாரென் கிளியென்றான்
கூண்டைக் காட்டி வாலில்லை
வீசிப் பறக்கச் சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
பேசும் இப்போது பேசுமென
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
பறவை யென்றால் பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்'       எனும்
கவிதையை வல்லிக்கண்ணன் பாராட்டுகிறார்.  சுய அனுபவத்தை உறவுப்பெயர்களுடன், இயற்கை சார்ந்த பின்னணிச் சித்தரிப்புகளுடனும் சுருக்கமான சொற்களால் மிக எளிமையாகத் தாமிரபரணி மண்சார்ந்து படைத்துவரும் கல்யாண்ஜி, அறுபதுகளில் எழுதத் தொடங்கி இடையில் நிறுத்திக் கொண்ட பல நூறு கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார்.
    ஒரு சில கவிதை இயக்கங்கள் தோல்வியைக் கண்ட எழுபதுகள் எண்பதுகளிலும் கல்யாண்ஜி புதுக்கவிதையில் பல்வேறு சோதனைகளைத் தொடர்ந்து செய்தவாறு எந்தச் சலனத்திற்கும் ஆட்படாமல் எழுதினார்.  தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத தன்மையையும், குழுச் சண்டைகளில் இறங்காமல், ஒதுங்கி இலக்கியத்தை விட சக மனிதர்களின் மீதான அன்பு என்ற கருத்தியலும் அவரை எல்லாச் சூறாவளிகளிலிருந்தும் காத்தன.  அவர்தன் படைப்பிலக்கியங்களின் மூலம் எந்தப் பிரச்சாரத்தையும் வலிந்து மேற்கொண்டதில்லை.
    “கலைஞன் எப்போதுமே கண்ணாடிக் குருவி, நிழலைக் கொத்தி, நிழலைக் கொஞ்சி நித்தம் தவம் செய்கிறவன்.  தன் அனுபவத்தின் வாழ்வின் ஜாடைகளுடன் அவன் அடுத்தடுத்துத் தீவிரமாக வரைகிற பொது முகத்தில் இவனுடைய முகமும் தெரிகிறது என்ற கல்யாண்ஜியின் கருத்து, அவரது கவியுலகை நம்மால் புரிந்து கொள்ள உதவியாக அமைகிறது.
    ஒரே படைப்பாளி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் இயங்கச் கூடியவனாக இருக்கும்போது திறனாய்வாளன் படைப்பின் ஊற்றுக் கண்ணைக் கண்டறிவது சற்றுக்கடினம்தான். பசுவய்யாவாகக் கவிதை படைத்த படைப்பாளி, சுந்தரராமசாமியாகக் கதை சொல்லியாக மாறும் கணத்தை மதிப்பிடுவது சவாலானதுதான்.
    படைப்பாளி வடிவத்தைத் தீர்மானித்த நிலை கடந்து, அவன் சொல்ல விழையும் பாடுபொருள், வடிவத்தைத் தீர்மானிக்கிறது.  வேதியியல் ஆய்வுக் கூடத்தில் பீயூரெட்டிலிருந்து விழும் சொட்டுத்திரவத்தின் எந்தத்துளி, குடுவையிலுள்ள வேதிப் பொருளை ஒரு வினாடியில் நிறம் மாற்றும் என்பதை இமைக்காமல் பார்த்தாலும் எப்படியும் தவறவிட்டுவிடுமோ அதே போன்ற நிலைதான் வண்ணதாசன் கல்யாண்ஜியாக மாறுகிற வினாடி.
    மரங்களைப் பற்றி, மாங்கொப்பை முறித்த மணத்தைப் நுகர்ந்து ஓடிவருகிற ஆயாம்மா பற்றி, 'ஒண்ணைப் பிடுங்கினா ஒண்ணை நடணும் இல்லையா' என்று  நடுகை கதையில் நடுதலைப் பற்றிச் சொல்லும் அதைக் கவிதையில் சுருக்கமாக, உருக்கமாகக் கூறுகிறார்.
    “பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்.
    மொரமொரவென
    மரங்கள் எங்கோ சரியாஎன்று
வண்ணதாசன் கல்யாண்ஜியாக மாறுமிடம் முக்கியமானது.  முன்பின், புலரி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், நிலா பார்த்தல், அந்நியமற்ற நதி, இன்னொரு கேலிச் சித்திரம் என்ற அனைத்து கவிதைத் தொகுதிகளிலும் கல்யாண்ஜியின் தனித்துவம் தெரிகிறது.
    ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் படைப்பாளி எத்தனை வாசகர்களாகச் சென்றடைந்துள்ளார்? என்ற கேள்வி தமிழ்ச் சூழலில் கவலை தரத்தக்கது.  'ஒளியிலே தெரிவது' நூலின் முன்னுரையில் வண்ணதாசன் இவ்வாறு ஆதங்கப்படுகிறார்.  '2007 இல் வந்த பெய்தலும் ஓய்தலும்புத்தகத்தை இப்போதுதான் வந்திருக்கிற ஒன்று போல, 2010இல் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்' என்று கூறும் வண்ணதாசன், “இப்போது இந்த லட்சணம் என்றால் சந்தியா பதிப்பகம்
2000-2001
இல் என்னுடைய முழுத் தொகுப்பையும், கிருஷ்ணன் வைத்த வீட்டையும். வெளியிட்டிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சி நற்றுணையாவது நமச்சிவாயவே என்று திருச்சிற்றம்பலம் பாடி முடித்திருப்பார்கள்.   நான் கிட்டத்தட்டக் காணாமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டுஎன்று எழுதுகிறார்.
    பாரதி தொடங்கி வைத்த கவிதைப் பரம்பரையில் வெளிவந்த ஓர் அழகியல் கவிஞன், கி.ரா.கு..ரா. புதுமைப்பித்தன், மௌனி, .சா.ரா. இழுத்த சிறுகதைத் தேரை ஐம்பதாண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் எதார்த்த சிறுகதையாசிரியன்,கவிதையும் உரைநடையும் கலந்து புதிய உரைவீச்சோடு 'அகம்புறம்' படைத்த உரைநடை நாயகன், கடிதத்தாள்களையே இலக்கியப் பக்கங்களாக மாற்றிக் கடித இலக்கியப் பக்கங்களாக அன்பாளன், கோட்டோவியங்களால் மனக்குகைகளில் சித்திரங்கள் வரைந்த சித்திரக்காரன் காலத்தின்முன் காணாமல் போய் விடுவேனோ என்று கையறுநிலையில் பேச வேண்டிய சூழல் நவீன இலக்கியத்திற்கு நல்லதல்ல.
    வாழும் மக்களின் வாழ்வியலை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பதிவு செய்து தரும் இந்த அன்பு எழுத்தாளனுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறது?  தாமதமாய் தரும் மதிப்பு தரமான எழுத்தாளர்கள் உருவாதலைத் தடுக்கும்.