கவிதை

Posted


திற... பற....



ஒரு பறவையின் பரந்துபட்ட
ஆகாயத்தைப் போல
அகன்று பரந்திருக்கிறது
இந்த ஆச்சர்யமான வாழ்க்கை
ஒரு மீனின் நீந்துதலுக்காய்
காத்திருக்கும்
பரந்த ஆழியைப்போல்
பரந்து கிடக்கிறது இப் பாசவாழ்க்கை
பறக்கவும் நீந்தவும் நேரமற்று
முட்டைக்குள் முடங்கிக் கிடக்கின்றன
இம்மனிதக் குஞ்சுகள்
அகலக் கதவுகளை
அகன்று திறந்துக் காத்திருக்கும்
அழகான வாழ்க்கை முன்
நம்மையே நாம் மூடிக்கொள்கிறோம்
நாகரீகம் ஏதுமற்று
                     


தேடி ஓடி

தேடிச் சோறள்ளித் தின்றுத்
தெருத் தெருவாய் வேலைக்கலைந்து
ஓடிப் பேருந்து பிடித்து
பணி செய்து, பிணி பல ஏற்று
நாடிப் பெண் தேடிக் காதலித்து
நடுத்தெருவில் விட்டுப் பிரிந்து
மற்றொரு பெண் பார்த்து
மணமாலையிட்டு
மழலைபெற்று கவலையோடு வாழக் கற்று
நரைகூடி எமவண்டியேறி
அப்பால் போகிறோம்
வேடிக்கை மனிதராய் 
 
                                             முடிகிறது

மடியிலமர்த்திக் கதை சொல்கிறேன்
'ம்' ஒலியோடு தலையாட்டித்
தூங்குகிறது என்சிறு குழந்தை
பொம்மைகளை உண்மைகளாய் நம்பவும்
செப்புச் சாமான்களில் சோறுகறி பொங்கவும்
ஆடைகளற்றுத் தெருவரை போகவும்
பொக்கை வாய் குழிவிழ அழகாகச் சிரிக்கவும்
பிடித்த கரம் நம்பி  விரல் தந்து நடக்கவும்
மண்ணள்ளி மகிழ்வாய் மறைவாய் வைத்துத் தின்னவும்
சுவற்றுப் பரப்பில் சுதந்திரமாய் ஓவியங்கள் வரையவும்
இருளைக் கண்டால் தாயிடம் பதுங்கவும்
பிரணவ் போன்ற குட்டிக்குழந்தைகளால் முடிகிறது
சுள்ளென்று எரிந்து விழுந்து
அடித்துத் துவைக்க மட்டுமே
நம்மால் முடிகிறது.
                               - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com
                             
                            ரசி

யானை லத்தியை மிதித்தாயென்றல்
காலில் முள்குத்தாதென்றாய்
மிதித்தேன்.


யானை வால்முடியை வளைத்துக்
கைக்காப்புபோட்டால்
சீர்தட்டாதென்றாய

 போட்டேன்.


 வீட்டுவாசலில் ஆசிதர வந்துநிற்கிற
 யானை முன்
 வாளி நீரோடு போய்
அள்ளித் தெளித்துக் கொண்டால்
முகம் தெளிச்சியாயிருக்குமென்றாய்
செய்தேன்.

ஒரு ருபாய் தந்தால் காஜமுகனின்

ஆசி கிடைக்குமென்றய்
பெற்றேன்.

எப்போதாவது சொன்னாயா

யானை வந்தால்
ரசியென்று.........

                          -Dr.S. மகாதேவன்
                                        
                            மரத்த மனம்

பொன்னமராவதி
பெருநாவலர்
மரக்கடைக்கருகில்
சவ ஊர்வலம் நடந்தபோது
பார்க்கப் பயந்துபோய்
திரும்பிய விநாடிகள்

சாலை முழுக்க

ஊர்வலம் போன
சுவடுகளின் சாட்சியாய்
மஞ்சள்

  மரண மலர்கள்!

 

இப்போது
குழந்தை கொல்லப்பட்ட
கொலைக் காட்சியைத்
தொலைக்காட்சியில்
பார்த்தாலும்
பாப்கானை அள்ளி
பல்லில் அரைத்துத்தள்ள முடிகிறது.

             
                                முனைவர் ச. மகாதேவன் 
                             முகம்

என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.

             முனைவர்.ச.மகாதேவன் 
                           பத்திரமாய்

நகரப் பேருந்து நெரிசலில்
நடத்துநர் தந்த நாலுரூபா பயணச்சீட்டை
வியர்வை சிந்தும் விரலிடுக்கில்
பத்திரமாய் பாதுகாப்பதைப் போலப்
பலநேரங்களில்
கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது

பிடிக்காத அலைவரிசையைப்

பிடிவாதமாய் நகர்த்துகிற
ரிமோட்களைப் போலப்
பிடிக்காத மனிதர்களிடமிருந்து
பிடிவாதமாய்
நகரத்தான் வேண்டியிருக்கிறது

கண்ணாடித் தொட்டியின்

செவ்வகப் பரப்புகளில்
அர்த்தம்தெரியாமல்
முட்டி மோதி அலைகிற
அலங்கார மீங்களைப்போல
அர்த்தம் பிடிபடும்வரை

எதற்கும் காத்திருக்கத்தான்

வேண்டியிருக்கிறது
அது அது அது அதன்
உட்பொருளை
உணர்த்தும் வரை!!!!!!!

                                  
                               
                 -முனைவர் ச.மகாதேவன் 
                  
                            அந்த நாட்கள்

பனையோலைப் பெட்டியில்
கொச்சக் கயிறு பிடித்துத்
துக்கிப் போன
உடன்குடிக் கருப்பட்டிச் சிப்பங்கள் - இன்று
வண்ணார்ப்பேட்டைப் பேரங்காடியின்
அச்சடித்த பிளாஸ்டிக்  பைக்குள்
நியான் விளக்கு ஒளிவெள்ளத்தில்..



சாத்தூர்க் கடைத் தெருவில்
செட்டியார் கடை மண்பானைக்
குளிர்ச்சியில் சிரட்டை அகப்பையோடு
மிதந்த எண்ணெய் - இன்று
பாலிதீன் பாதுகாப்பில்
இலவச எள் பாக்கெட்டோடு

வீராபுரத்து வில்வண்டிகளில்

கம்பித் தடுப்பில்
கைகளை வைத்தபடி
சாலைகளை மெதுவாய்
ரசித்த குழந்தைகள் - இன்று
ஆட்டோ நசுங்கல்களில்
அடைபட்டு விரைகின்றன

 

இருப்பதை விட
இழந்தது
இனிக்கிறது
 

             -Dr.S. மகாதேவன்

                        அவரவர்

அவனுக்குச் சொன்ன கவிதை
 உனக்கில்லை
உனக்குச் சொல்லாத கவிதையும்
அவளுக்கில்லை
ஆனாலும்
அவரவருக்குச்
சொன்ன கவிதையே
அவரவருக்குப் புரியும்
ஆதலால்
அனைவருக்கும்
புரியும் கவிதையென்று
அவனியில்
யாதொன்றுமில்லை


        
                           - முனைவர். ச. மகாதேவன்