அப்பா அடி... அப்பாடி!-நன்றி என் விகடன்

விஜய், தனியார் நிறுவன ஊழியர், விக்கிரமசிங்கபுரம்: ''காலேஜ் ஃபைனல்இயர் படிக்கும்போது ஒரு நாள், பசங்களோட சேர்ந்து, ஊருக்கு ஒதுக்குபுறமா நின்னு சிகரெட் குடிச்சுட்டு, ராத்திரி ஒன்பது மணிக்கு வீட்டுக்குப் போனேன். போனதும், அப்பா செவுட்டுல பளார்னு ஒரு அறைவிட்டார். மறுநாள்தான் தெரிஞ்சுது... அப்பா வழக்கமா போற ரூட்டுல ரோடு வேலை நடந்துட்டு இருந்ததால, நாங்க நின்ன பாதை வழியாக வந்தவர், நான் சிகரெட் குடிக்கிறதைப் பார்த்திருக்கார். அதுதான் நான் கடைசியா வாங்கின அடி. அப்புறம் சிகரெட் பிடிக்கிறதையே நிறுத்திட்டேன்!''
மகாதேவன், கல்லூரிப் பேராசிரியர், நெல்லை: ''நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் ஓட்டிப் பழகணும்கிற ஆசையில, அப்பாவோட ரேலி சைக்கிளை அவருக்குத் தெரியாம எடுத்துட்டுப்போய் ஒரு ஆட்டோமேல மோதிட்டேன். சைக்கிள் ரிம் 8 மாதிரி வளைஞ்சிடுச்சு. அப்பாவுக்கு சைக்கிள்னா உயிர். அவருக்குக் கோபம் தாங்க முடியலை. பச்சை மட்டையால அடி பின்னி எடுத்திட்டார்!''
ராஜா சரஸ்வதி, டிராவல்ஸ் ஓனர், சாத்தான்குளம்: ''பத்தாம் வகுப்பு படிக்கும்போது காலாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் ஃபெயில் ஆகிட்டேன். அப்பா அடிப்பாருனு பயந்துக்கிட்டு ரேங்க் கார்டுல நானே கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். மறுநாள், கிளாஸ்ரூம்ல ஃபெயில் ஆன பசங்க எல்லாரும் அப்பாவைக் கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. நானும் என் அப்பாவைக் கூட்டிட்டுப் போனேன். பேச்சுவாக்குல 'உங்க பையன் ஃபெயில் ஆகியிருக்கான். ஒரு வார்த்தைகூட கேட்காம கையெழுத்து போட்டிருக்கீங்க' னு ஹெட்மாஸ்டர் அப்பாகிட்டே ரேங்க் கார்டை காட்டிட்டாரு. அங்கேயே அப்பா என்னை அடி வெளுத்துட்டார்!''
செந்தில், கல்லூரி மாணவர், மகாதேவன்குளம்: ''காலேஜ்ல ரெண்டாவது வருஷம் படிக்கும்போது அப்பாகிட்டே ஸ்கூட்டி வாங்கிக் கேட்டேன். அவர் வாங்கித் தரலை. அதனால, மூணு நாள் சாப்பிடாம அடம் பிடிச்சுக்கிட்டே இருந்தேன். அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. ஒரு கட்டத்துல அப்பா பொறுமை இழந்து பிரம்பை எடுத்து சாத்து சாத்துனு சாத்திட்டார். அப்புறம், 'குடும்ப கஷ்டத்தைப் புரிஞ்சு நடக்கணும்டா’னு சமாதானம் சொன்னவர், என் பாவமான முகத்தைப் பார்த்துட்டு ஸ்கூட்டி வாங்கித் தந்துட்டார்!''
முத்துவேல்ராஜா, தொழில் அதிபர்,சாத்தான்குளம்: ''பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது என்னோட கிளாஸ்மேட்டான ஒரு பொண்ணுகிட்டே பேசிட்டு இருந்தேன். அதை எங்க அப்பா பார்த்திருக்காரு. நான் வீட்டுக்குப் போனதும் ' பொட்டப் புள்ளகிட்டே உனக்கு என்னல பேச்சு'னு அடிச்சுட்டாரு. ' இல்லப்பா கொஸ்டின் பேப்பர்தான் கொடுத்தேன்’னு சொன்னேன். 'லவ் லெட்டர் கொடுத்துட்டுப் பொய் வேற சொல்றியா?’னு இன்னும் நாலு அடி முதுகில வெச்சார். பண்ணாத லவ்வுக்கும் செய்யாத தப்புக்கும் அடிவாங்கின ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்!''
- ஆ.கோமதிநாயகம்
OLDER POST
ABOUT US
- Unknown
Popular Posts
Pages
About
Copyright@Dr.s.Mahadevan Design By AJ Webdesigner