அப்பாவின் மைக்கூடு

Posted



 
பிரில் மையைப் பேனாவுக்குத்
திகட்டத் திகட்டப் புகட்டும்
அப்பா!
மூன்றே மாதத்தில்
முழுப் பாட்டிலையும்
காலி செய்து விடுவார்

கசியும் மையின் நீலநீரோட்டத்தை நிறுத்த
இருக்க இருக்கிறது
சிகப்பு நிற பழைய ரெமி பவுடர் டப்பாவில்
நிரப்பி வைத்த கிரிஸ்

சோம்பல் பார்க்காமல் அதன்
கழுத்துப் பகுதியைப் பனியன் துணியால்
பளிச்சென்று ஆக்கிவிடுவார் அப்பா

காலி மைக்கூட்டினை
அவர் வீணே தூர எறிந்ததில்லை
மை பாட்டில் மூடியை அகல ஆணியால்
துளையிட்டு ஸ்டவ் திரிபோட்டு
மண்ணெண்ணெய் விளக்காய்
மாற்றிடுவார்.

மின்சாரமற்ற இரவுப் பொழுதுகளில்
மைக்கூடு வெளிச்சத்தில்
அவர் முகம்
எப்போதையும் விடப் பிரகாசமாயிருக்கும்
எண்ணெய் தீரும்வரை
அவர் கைகள்
அலுப்பில்லாமல்
பட்டை பட்டையாய்
பக்கம் பக்கமாய்
எழுதும்

இப்போது இன்வட்டர்கள் இருக்கிறது
மின்சாரம் போன அடுத்த விநாடி
எரியும் அவசர விளக்குகள்
இருக்கின்றன..

ஆனால்
பக்கம் பக்கமாய் எழுத
அப்பாவால் முடியவில்லை
எதுவும் பேசாமல் அப்பா
பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.

குப்பை கூடாதென்று
அம்மா அந்த
மைக்கூடு விளக்கையும்
தெருவில் வீசி விட்டாள்.

அதோடு அப்பாவின்
ஒளியும் எழுத்தும்
அப்பால்

போனதாகவே எண்ணம்

வைக்கோற் கன்றுகள்

Posted




 
எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை லீவுக்கு வந்த
அத்தை பிள்ளைகளுடன்
அதிகாலையிலேயே
பாளை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள
பால் பண்ணைக்குச் சென்ற நாட்கள்
சட்டென்று நேற்றைக்கு காரணமின்றி நினைவுக்கு வந்தன…

ஆளுக்கொரு தூக்குச் சட்டியுடன்
பாலும் மோரும் வாங்கக் காத்துக் கிடப்போம்..

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க
பித்தளைப் போணியோடும் மடியில் கட்டிய
எண்ணெய் டப்பியோடும் சைக்கிளிலிருந்து
ஜம்மென்று இறங்குவார்
பால் பீச்சும் மயிலக் கோனார்…
அவர் சொன்னபடியெல்லாம்
பசுக்கள் கேட்பது எங்களுக்கு
ஆச்சர்யமாக இருக்கும்.

கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டுக்
கொஞ்சம் எக்கிக் குடிக்கும் போதே
பிடித்திழுத்துக் கட்டிச்
செம்புத் தண்ணீரால்
பசுவின் மடியைக் கழுவும் அவரது செயலை
பார்த்துப் பார்துச் சிலிர்ப்போம்

எல்லாப் பசுக்களிலும்
கடைசியாய் அப்பசுவிற்கு
அருகில் வந்தவர்
பாசத்தோடு தடவிக்கொடுத்தார்
எங்களுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் போலிருந்தது.

அவிழ்த்து விடக் கன்று அங்கே இல்லை
கேட்கப் பயம்
ஸ்டூல் மேலேறிப் பரணிலிருந்த
வைக்கோல் அடைத்த
விரைத்துப் போன கன்றுக்குட்டியை
எடுத்துப் பசுவிற்கு அருகில் நிறுத்தினார்
பாவம்…
அவ்வைக்கோற் கன்றினை
அந்த ஐந்தறிவு ஜீவன்
தன்கன்றென நினைத்து நாவால் வருடிக் கொடுத்தது.

வழக்கம் போல் பால் கறக்க
அவர் செம்பைத் தூக்கினார்
அதற்கு மேல் எங்களால்
அங்கே இருக்க முடியவில்லை .

வகுப்பு முடித்து துறையில்
அமர்ந்த போது
சொக்கட்டான் தோப்பு சண்முகத்தின்
தங்கையின் பத்துநாள் குழந்தை
மருத்துவமனையில் இறந்தது
நினைவுக்கு வந்தது

பசுவிற்குக் வைக்கோற்கன்று தந்த
கணநேரத் கானல் நிம்மதியைச்
சிசுவை இழந்த சண்முகத்தின்
தங்கைக்கு யாரால் தரமுடிமுடியும்?

சில நேரங்களில்
அஃறிணையாகவே
இருந்தது விட்டுப் போகலாம்
போலிருக்கிறது.  


குயிலின் குரலில்….

Posted


 
அந்தக் குயில்


கூவும் போதெல்லாம்
என் ஆன்மா
ஆனந்தமயமாகிறது . . .

அதன்
ஒவ்வோர் அழைப்பிலும்
இயலாமையின் இன்னிசைகள்

மரத்தின் மீதமர்ந்து நம்
மனதைப் பிசைய
அந்தப் பாரதிக்குப் பிடித்த
பறவையால் மட்டும் எப்படி முடிகிறது?

எதனை நோக்கிய
எதனது அழைப்பு
அதன் ரம்யமான குரல்?

எதையோ எதிர்பார்த்து
எதையோ இழந்து
எதையோ அழைக்கும்
அந்தக் கருப்புக் குயிலின்
இன்னிசைக்கீதம்
சோகத்தின் சுகக்குரலா?

அருமை ஆத்மாக்களே!
இனி
குயில்கள் கூவும் போதேனும்
குவலயத்தை
அமைதி காக்கச் சொல்லுங்கள்

பெட்டிகளின் உலகு…

Posted




     முந்திப் பிறந்த குழந்தையைக் காக்க
     இளவெப்பச்சூட்டோடுக்
     கண்ணாடிப் பெட்டிகள்

     வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப் போன
     மகனின் வரவுக்காய் இறந்த பின்னும்
     காத்திருக்கிறார்கள் பெற்றோர்கள்
     குளிர்பதனப் பெட்டிக்குள்

     அட்டையிட்டால் அள்ளித்தரும்
     உடனடி பணம்தரு பெட்டிகள்

     எதுவும் பாயாமலிருக்கச்
     சுதந்திர தின உரை விடுக்கும்
     தலைவரைத் தற்காக்கும்
     குண்டு துளையாப் பெட்டிகள்

     சுடுகாட்டில் எரியூட்ட
     மின்சாரப் பெட்டிகள்

     பதவி பெற, பட்டம் பெற
     பணம் நிறை பெட்டிகள்

     அம்மா குந்தி!
     பெட்டியில் வைத்துக் கர்ணனை
     நதியில் விட்டாலும் விட்டாய்
     இப்போது
     எல்லோரைச் சுற்றியும்
     ஏதாவது ஒரு பெட்டி
     எப்போதும்
     இருந்துகொண்டே
     இருக்கிறது
     ஆம்!
     பெட்டிக்குள் வாழும்

     குட்டிகளானோம் நாம்….

வெளியூர்ப் பயணம் பயணப்பொழுதுகள்…….

Posted



 
     வெகுநாட்களாயிற்று
     வெளியூர்ப் பயணம் போய்….
     காயப் போட்ட கரிச்சேலையாய்
     நீண்டு கிடக்கும் சாலைகள்…

     இரப்பர் உருளைகளைத் தேய்த்தபடி
     சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள்

     இயற்கையைப் புதைத்த
     இரகசிய மகிழச்சியில்
     வயற்காடுகளை அழித்து
     நாசமாக்கியதன் நினைவாக
வண்ணக் கற்கள்

     இலவச உணவுக்காக
     இருபது நிமிடமாய்
     காத்துக் கிடக்கும்
     பேருந்துகள்

     மாலை நாளிதழை மடித்துப்
     பேருந்துக் கண்ணாடியைத் துடைக்கும்
     மேட்டேல் பையன்கள்
    
     பட்ஜெட் பற்றாக்குறையால்
     கட்டிவந்த பொட்டலம் பிரிக்கும்
     திருவாளர் பொதுசனம்

     திரும்பத் திரும்ப
     ஒரே காட்சிகள் . . .
     இப்போதெல்லாம்
     பயணிப்பதைக்
     குறைத்துக் கொண்டேன்

     பயணிப்பதை விடப்
     பயணித்த பொழுதுகளில்


     பயணிப்பது சுகமானது 

மவுனயுத்தம்

Posted


                     
 
     மின்சாரமற்றுப் போ
     காலைப் பொழுதுகளில்
     அழைப்பு மணிகள் அமைதி காக்க
     மரக்கதவுகள் அப்பணி செய்யும்

     சன்னலோர தாமிரபரணி
     ரசிப்புகள் கூட
     நடத்துநரின் சீட்டு நச்சரிப்பில்
     கடந்து சாகும்.

     பாட்டியின் அரை நூற்றாண்டு
     உரல் தளத்தில்
     டேபிள் டாப் கிரைண்டர்கள் ஓடித்தொலைக்கும்

     தாய்ப் பாலுக்கு அழும்
     சம்பந்தர்களுக்குச் சற்றும் தாமதமில்லாமல்
     செரலாக்குள் செய்து தரப்படும்


    
     நுரைத்துப் பொங்கும்
     செம்புப் பால்களை
     தூக்கி எறியப்படும்
     பால் பாக்கெட்டுகள்
     பதிலீடு செய்யும்

    

நர்சரிக் குழந்தைகளின்
     பாடத்திட்டத்தில்
     முதியோர் இல்லங்களின்
     முகவரிகள் இணைக்கப்பட்டிருக்கும்

     என்ன செய்ய?
     மண்டையோட்டை உடைத்தாலும்
     மறுபேச்சு பேசாதிருத்தலைத் தவிர
      

காலச்சக்கரம்

Posted



            தொடக்கமற்று முடிவுமற்று
            ஆச்சர்ய ஆரக்கால்களோடு
            வாழ்வுப் புள்ளியை மையமிட்டுச் சுழல்கிறது
            காலச்சக்கரம்.

            கிரகங்களினூடே உருண்டோடி
            சமுத்திர ஆழத்திலும் விழுந்தோடிச்
            சுக துக்கங்களை
            மானிடத்தில் மாட்டிவைத்துக்
            காலச்சக்கரம் காலம் கடந்து சுழல்கிறது
           
            கிளம்பிய இடமும்
            அடையும் இடமும்
            சற்றும் புலப்படவில்லை.

            பிறப்புக்கும் இறப்புக்கும்
            மத்தியில் பிரபஞ்சத்தைப்
            பிடிவாதமாய் சுழல வைக்கிறது

            இது விடுவித்த
            புதிர்களுக்கு விடைதேட முடியவில்லை

     காலத்தை அளந்திடுமா
            காலண்டர் தாள்கள்?
            காலத்தின் ஆழத்தை
            அளக்க முயன்றவர்கள்
            ஆழ மண்ணிற்கு
            அடியில் போனார்களே!

            காலத்தின் முன் காணாமல்
            போனவர்கள்
            உண்டாக்கிய மாயத்தோற்றங்கள்
            மானுடப் பரப்பெங்கும்

           

முகம்

Posted



 
என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.


கேள்வி

Posted



எதிரே பார்த்ததும்
ஏனிந்தக் கேள்வி?
இவரைப் பார்த்தால்
இதனைக் கேட்போமென
எவரைப் பார்த்தாலும்
அதே கேள்விகள்!
அச்சிட்ட விண்ணப்பப் படிவம் மாதிரி
அலுக்காத அதே கேள்விகள்
”நல்லா இருக்கீங்களா?”
கேட்க வேண்டுமே
என்பதற்காகக் கேட்டானேயொழிய
உள்ளமொன்றிக் கேட்கவில்லை
அப்படி நானும் கேட்டிருப்பேனே
ஆறெழு சமயங்களில்

சிதலமான சின்ன விரல்கள்

Posted



வேனிற்கால வெப்பப் பொழுதுகளில்
இலைகளை இழந்துவிட்டு
மொட்டையாய் முனகுகிற
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மாரடைப்பு வருகிறது
உங்களின்
சின்ன விரல்களைச்
சிதலமாக்கிய
காலன் யார்?

நான்

Posted


ஓடம் முழுக்க
ஓட்டைகளோடு
கால கங்கையின்
கடைசிப் பயணியாய்
என்னை இழந்து

என்னுள் இழந்து
எதையோ தேடும்

நான் . . .

விழி . . . எழு . . .

Posted



 
இரண்டு சூரியன்களை
இமைக்குள்ளே இருத்திக் கொண்டு
இருளில் இருப்பதாய்
இனியும் சொல்லலாமா?


தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா திருநெல்வேலி

Posted

 தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா திருநெல்வேலி அனைத்துத் தமிழ் சங்கங்களும் பங்கேற்ற விழா  20.2.2013 சிறப்பு விருந்தினர் :திரு .வசந்தகுமார் வசந்த் தொலைக் காட்சி ,முனைவர் ச .மகாதேவன் ,முனைவர் பா .வளனரசு ,முனைவர் கு .சடகோபன் ,திரு .உ .சிதம்பரபண்டியன் ,திரு .p .ஆவுடையப்பன் ,நல் ஆசிரியர் சு .செல்லப்பா 



























தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா திருநெல்வேலி அனைத்துத் தமிழ் சங்கங்களும் பங்கேற்ற விழா  20.2.2013 சிறப்பு விருந்தினர் :திரு .வசந்தகுமார் வசந்த் தொலைக் காட்சி ,முனைவர் ச .மகாதேவன் ,முனைவர் பா .வளனரசு ,முனைவர் கு .சடகோபன் ,திரு .உ .சிதம்பரபண்டியன் ,திரு .p .ஆவுடையப்பன் ,நல் ஆசிரியர் சு .செல்லப்பா