வண்ணதாசனுடன் நேர்காணல்

தொகுப்பு : முனைவர் ச. மகாதேவன்
பேரா. சிவசு
சிறுவயதில் உங்களைப் பாதித்த புத்தகங்கள் பற்றிக் கூறுங்களேன்.

கட்டளை கைலாசம்
உங்களைத் தொடக்க காலத்தில் பாதித்தவர்கள் யார்?

ஒரு காலம் வரைதான் பாதிப்பு எல்லாமே.. அதன்பிறகு எனக்கென்று ஒரு நடையும் கதைப் போக்கும் உருவாகிவிட்டது.
ச. மகாதேவன்
இன்றைய சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குழுமனப்பான்மையும் வணிக நோக்கமும் பெருகிவிட்டது. அவரவர்கென்று நினைத்ததையெல்லாம் அச்சாக்குகிறார்கள். அவற்றில் வருகிற சமீபத்திய கவிதைகளை எல்லாம் பார்க்கும்போது கவிதைகள் வாசிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.
வேலம்மாள்
இன்றைய பெண்ணிய எழுத்தாளர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அம்பை என்ற லட்சுமி எழுதிய எழுத்துக்கள் பெண்ணிய எழுத்துக்கள் இல்லையா? முப்பது வருடங்களுக்கு முன்பே பெண்ணிய எழுத்துக்களைத் தந்த அம்பையின் எழுத்துக்களை நாம் ஏன் பேசுவதில்லை. சல்மாவின் ஜாமங்களின் கதை அருமையான படைப்பு, அதன் பின் என்னவாயிற்று அவ்வெழுத்துக்கள். பெண்ணிய எழுத்தாளர்களென்று ஒரு சில பெயர்களை நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம், அவர்களின் முதல் படைப்புக்களில் இருந்த தகிப்பு அதற்கடுத்து வந்த படைப்புக்களில் ஏன் இல்லாமல் போனது? எதையும் வலிந்து எழுதாமல் இயல்பாக எழுதிய அம்பையின் எழுத்துக்களை நான் மிகச் சிறந்த பெண்ணிய எழுத்தாகப் பார்க்கிறேன்.
ச. மகாதேவன்
தமிழின் எந்த இலக்கிய வடிவத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்?
எல்லா வடிவங்களையும் விட நாவல் வடிவத்தின் மீதே நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். புதிய முயற்சிளோடு தங்களின் வாழ்வைச் சொல்ல எத்தனை அற்புதமான நாவலாசிரியர்கள் தமிழுக்கு வந்திருக்கிறார்கள்.
ஜோ.டி. குருஸின் 'ஆழிசூழ் உலகு' வெங்கசேனின் 'காவற் கோட்டம்' என்ன அற்புதமான நாவல்கள். இஸ்லாமிய வாழ்வியலை மிக அற்புதமாகச் சொல்லும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன்காரத் தெரு' மிக அருமையாக வந்திருக்கிறது. சிறுகதைகளில் சொல்லிக் கொள்ளும் படியாகச் சோதனை முயற்சிகள் நடைபெறுவதில்லை. கவிதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். சோதனை முயற்சிகளோடு தமிழ் நாவல் இலக்கியம் அதிக நம்பிக்கை தருகிறது.
கட்டளை கைலாசம்
இளைய எழுத்தாளர்களுக்கு எவ்வகையில் வழி காட்டுகிறீர்கள்?
யாரும் வழிகாட்ட வேண்டாத அளவுக்கு அவர்கள் எல்லோரையும் விடத் தெளிவாக இருக்கிறார்கள்.
சிவசு
புதிய உரைநடைப் போக்கை உங்களின் 'அகம்புறம்' நூல் தமிழில் முன் வைத்திருக்கிறதா?
சிறுகதைக்கும் கவிதைக்குமிடையிலமைந்த ஒரு நடையில் 'அகம் புறம்' தொடரை ஆனந்த விகடனில் எழுதினேன். அந்த வெகுசன ஊடகத்தில் நான் எழுதிய எழுத்து அதிகமான வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது.
ஆறாம் வகுப்புப் பயின்ற போது, நடைபெற்ற நிகழ்வுகளைக் கூட அதில் உரைநடைச் சித்திரமாக்கியுள்ளீர்களே நினைவாற்றல் உங்கள் பலமா? அப்படியெல்லாம் இல்லை. ஒரு சம்பவம் நடைபெறும் போது அதை மனதில் பதிவு செய்து கொள்கிறேன். தேவையான நேரத்தில் சரியான வடிவத்தில் என் மொழிநடையில் பதிவு செய்கிறேன்.
கட்டளை
தாமிரபரணி நதி சார்ந்து நிறைய எழுதுகறீர்கள். அந்நதி சுற்றுச்சூழல் சீர் கேட்டினால் மாசடைதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தாமிரபரணி மாசுறுதல் குறித்து எழுத்தாளன் மட்டுமே அக்கரை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல. வாழும் அனைத்து மக்களோடும் தொடர்புடையது அது. நதியைக் காக்க எல்லோரும் முயல வேண்டும். கங்கை கொண்டானில் பன்னாட்டு நிறுவனம் ஆலை நிறுவிய போது, எஸ்.எப்.ஐ., அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே பேருந்து பேருந்தாக ஏறித் துண்டுப் பிரசுரம் தந்தார்களே! வேறு யார் என்ன செய்தார்கள்.
சிவசு
உங்கள் எழுத்துக்கள் சமுகத்தின் நல்லவற்றையே பார்க்கின்றன. வாழ்வில் மோசமாக ஏதும் நடக்க வில்லையா?
அல்லவை விலக்கி நல்லவற்றை எழுதுவதை எழுத்து அறமாகக் கருதுகிறேன். என்னைப் பாதிக்கும் சம்பவங்களில் எதை நான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேனோ அதையே நான் படைப்பாகத் தருகிறேன்.
மகாதேவன்
'இகாரஸ்' எனும் கிரேக்க தொன்மத்தைப் பயன்படுத்திச் சூரியன் அருகில் பறக்கிறவர்கள்' எனும் நல்ல கதையைத் தந்தீர்களே. அக்கதை குறித்துக் கூறுங்களேன்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி விடுதியில் நடைபெற்ற சம்பவத்தைக் கிரேக்கத் தொன்மமான 'இகாரசுடன்' தொடர்பு படுத்திச் சூரியனுக்கு அருகில் பறக்க ஆசைப் பட்டவன் கதை குறித்து எழுதினேன். உங்கள் ஆய்வேட்டில் அது நல்ல கதை என்று எழுதியிருந்தீர்கள்.
கட்டளை
பங்கேற்காத அனுபவத்தைக் கதையாக எழுதியுள்ளீர்களா?
இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்தந்த கால கட்டத்தில் என் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளே என் கதைகள்.
வேலம்மாள்
உங்கள் கதைகளில் குடும்பம் என்ற ஒன்றே திரும்ப வருகிறது. சமுதாயச் சிக்கல்களை நீங்கள் ஏன் எழுதுவதில்லை?
நான் வாழ்ந்த சூழ்நிலை குடும்பம் சார்ந்தது. என் ஆச்சி பாப்பாத்தியம்மாளின் இடத்தை இன்றும் அவரே நிறைவு செய்கிறார். என் ஆச்சி தாத்தாவிடம் பெற்ற அன்பு, திருமணமான பின் என் மனைவி வீட்டார் என் மீது செலுத்திய அன்பு இவை எல்லாம் என்னைக் குடும்பம் சார்ந்து அன்பு சார்ந்து, எழுத வைத்திருக்கலாம். வங்கியில் வேலை பார்க்காமல், தாலுகா அலுவலகத்தில் நான் வேலை பார்த்திருந்தால் பல சிக்கல்களைச் சந்தித்திருக்கலாம். சமுதாயச் சிக்கல்களை நான் பதிவு செய்யவில்லை என்று கூற இயலாது. சக மனிதர்களால் ஆனதுதானே சமுதாயம். சக மனிதர்களை அன்பு செலுத்துபவன் சமுதாயத்தை அன்பு செலுத்துவதாகத் தானே அர்த்தம்.
கல்வி வளாகங்களில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்ற உங்கள் அனுபவம் குறித்து
படைப்பாளியின் கதைகளை, ஒரு வரிகூட வாசிக்காமல் அவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிற மாணவர் கூட்டத்தில் பேசவேண்டி உள்ளது. கல்வி வட்டாரத்திற்கு அப்பால் உள்ளவர்கள் நிறைய வாசிக்கிறார்கள். சமீபத்திலே ஈரோட்டிலே விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். என் கைகளைப் பிடித்தபடி என் கதைகளை அவர்கள் விவரித்துப் பேசிய போது நிறைவாக இருந்தது ஒரு படைப்பாளி கொண்டாடப்பட வேண்டும். அவனுடைய படைப்புக்களை வாசிக்க வேண்டும். அதைத்தான் ஒரு படைப்பாளியாக இச் சமூகத்திடம் எதிர் பார்க்கிறேன்.
குறுந்தொகையைப் புதுக்கவிதை நடையில் தந்த வண்ணதாசனின் அண்ணன் திரு. கணபதி அவர்கள் காலமான ஒரு மாதத்திற்குள் நெகிழ்வான கனமான மனநிலையில், இறந்து போன அண்ணனின் நினைவுகளுடன் அவருடைய சட்டையை அணிந்தபடி உணர்ச்சிப் பெருக்காக திரு. வண்ணதாசன் நம் நேர்காணல் வினாக்களுக்குப் பதில் சொன்னார். நன்றி சொல்லிப் புறப்பட்டோம். கைகளைப் பிடித்தபடி வாசல்வரை வந்து அன்போடு வழியனுப்பினார். அன்புதானே வண்ணதாசன்.
This entry was posted
at 05:07
. You can follow any responses to this entry through the
.