சுமை தாங்கி வரலாறுகள்

Posted



பொன்னமராவதி
பட்டமரத்தான் கோவிலுக்கருகேயிருக்கும்
அமரகண்டான் ஊருணிக்கரையில்
என் தாத்தா வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது
அந்தக் கல்லை நட்டபின்தான்
அம்மா பிறந்தாளாம்...
அப்போதிருந்து அந்தக் கல்லைப்
பார்க்கும் போதெல்லாம்
அம்மா குழந்தையாயிருப்பது போலக்
காட்சிகள் வரும்.

பத்து மாதக் கருவுடன்
பாப்புலர் திரையரங்கிற்குப் படம் பார்க்கப்போன
தென் பொத்தை வெள்ளையம்மா அக்கா
துள்ளத்துடிக்க இறந்து போனபோது
அவளதுமடிப் பாரம் இறக்க
ஊர் எல்லையில் மக்கள் வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது

இப்போது ஏதேனும் ஒரு
சுமைதாங்கிக் கல்லைப் பார்த்தால் கூடக்
கற்களுக்குப் பதில்
அம்மாக்களும்
வெள்ளையம்மாக்களும்
தெரிகிறார்கள்
அவை...
வாழ்ந்து முடிந்தவர்களின்
வரலாறுகள்.



This entry was posted at 22:14 . You can follow any responses to this entry through the .

0 comments