பதிவு செய்து வைத்த
இசை ஒலிக்கிறது...
இருபது பேர் சுற்றிச் சுற்றி வருகிறோம்
நாற்காலிகள்
நான்கு மட்டுமே.
கால்கள் விலகி விலகி நடந்தாலும்
கண்கள் இசைக்கருவியை இயக்குபவனையே
கவனமாகப் பார்த்து
மீள்கின்றன
யாரும் எதிர்பாராத நிமிடத்தில்
இசையை அவன் நிறுத்துவதும்
மீண்டும் ஒலிக்க வைப்பதும்
தொடர்கிறது...
ஒரு வினாடி...
இருப்பை மறந்து
இசையில் திளைக்கிறேன்
நாற்காலி ஒன்றும் காலியில்லை...
வெளியேற்றப்படுகிறேன்.
இசையில் இலயிப்பவனால்
நிறுத்தலைப் புரியமுடியாது
நாற்காலிகளில் மட்டுமே
கவனமாயிருப்பவனுக்குக்
காதுகள் இருப்பதற்கான
சாத்தியம் ஏதுமில்லை...
இசைத்தலும் ரசித்தலும்
நாற்காலியைச் சுற்றி
நாற்காலியைப் பற்ற
ஓடுகிறவனுக்கு
இருத்தலுக்கான நியாயமில்லை.
எனவே ஓடாதிருத்தலை மட்டுமே
இனி நான் செய்ய முடியும்
This entry was posted
at 02:25
. You can follow any responses to this entry through the
.