ஆலய மணிநா...
செந்தூர் கோவில் பூசை மணியோசையைக்
கேட்டபின்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்
மதிய உணவருந்தச் செல்வானாம்.
சவேரியார் கோவில் ஆலயமணி
விட்டு விட்டு ஒலித்தால்
சவவண்டி வந்துவிடுமென
பயந்து ஓடிய பள்ளி நாட்கள் இன்னும் நினைவில் உண்டு
பூசை நேரத்தில் ஒற்றை விசையில்
இயங்கும் மின்சார மேளதாள
மணிபொலியையும் கேட்கிறேன்.
இப்போது என் நினைவெல்லாம்
நா அறுந்து போனதால்
ஆண்டி நாடார் கடைக்கு
விற்கப்பட்டு உருக்க
உள்ளுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட
எங்கள் பரம்பரைக் கோவிலின்
தொன்மையான
ஆலய மணியைப் பற்றிதான்.
நினைத்துப் பார்க்கிற யாவுமே
உயிரின் வேரை
நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்
அன்பின் கருவி
வெயில் வந்தால் உற்சாகமாகிவிடுவாள் பாட்டி
மகளின் வரவுக்காய்
மாவடு போட்டுக் காத்திருப்பாள்.
முந்தைய நாளே சவ்வரிசியை ஊறப்போட்டுச்
சூரிய உதயத்தி்ற்கு முன்பே கூழ் வத்தலைக்
காய்ச்சி மொட்டை மாடிக்குப் போயிருப்பாள்
தாத்தா வேட்டி தரையில் விரியும்
சுடச்சுட கூழ் வத்தலைப் பாட்டி கையால் இட்டுக்
கடைசி வரிசை முடிக்கும் போது
சூரியன்
சுள்ளென்று சுடும்.
கருப்புத் துணியைக்
கம்புமேல் கட்டி
காகத்தைத் தடை செய்வாள்.
அடுத்த நாள் விடியலிலும்
அவசரமாய் எழுந்து
வேட்டியின் மறுபுறம்
தண்ணீர் தெளித்து
வற்றலை உத்தெடுப்பாள்
வற்றல் வாணலியில் பொரியும் கணத்தில்
மகள் வந்திருப்பாள்
வெயிலைக் கூட
அன்பின் கருவியாக்கச் சாரிப்
பாட்டியால் மட்டுமே முடியும்
முனைவர். ச. மகாதேவன்
This entry was posted
at 08:11
. You can follow any responses to this entry through the
.