வாய் ஏதுமற்று

Posted


     வாய் ஏதுமற்று
கதவில் மாட்டி
அறுந்து துடிக்கிறது பல்லியின் வால்.
பிடித்து மடி கரந்த
இரும்புக் கரத்தின் வலிமை தாங்கமுடியாமல்
வலியோடு நடக்கிறது சினைவெள்ளாடு

இரு சக்கர வாகனத்தில் சிக்கி
கால் முறிந்து முனகலுடன்
கெந்திக் கெந்தி நடக்கிறது நாய்

முப்பது மூட்டைகளோடு
முன்னேற முடியாமல்
திருவள்ளுவர் மேம்பாலத்தில்
திரவம் வடித்து நுரைதள்ளி நிற்கிறது
வண்டிக்காளை.

அங்குச அழுத்தம் தாங்காமல்
வேகாத வெயிலில்
வெந்து நொந்தபடி
ஆசிதருகிறது அந்த யானை

மூக்குப் பொடியின் நொடிதாங்கும் திரணற்றுச்
சாக்கடைக்குள் விழுகிறது
சபிக்கப்பட்ட ஓணான்

ஆனாலும்...
வலிகளோடு வாழத்தான் செய்கின்றன
அஃறிணைகளும் கூட...
புலம்பக் கூட வாயேதுமற்று.

This entry was posted at 10:28 . You can follow any responses to this entry through the .

0 comments